எப்படியும் தோழ்விதான் என ஈரோடு இடைத்தேர்தலில் வாசனுக்கு சீட் தந்து எஸ்கேப் ஆகும் எடப்பாடி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக அதிமுகவின் ஓபிஎஸ் உடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிட கோருவதாகவும் வாசனிடம் மீண்டும் அத்தொகுதியை ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பிவிட நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் போட்டியிட தங்கள் தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்திருப்பதாக கூறியதுடன் இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓபிஎஸ் மட்டுமே எனவும் கூட்டணி தொடர்பாக பாஜக ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதை ஆகி விட்டதாகவும் அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை எனவும் கூறிய புகழேந்தி, திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் எனவும் பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே தான் ஓபிஎஸ் உடன் இருப்பதாகவும் கூறினார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி புத்திசாலி எனவும் கள நிலவரம் தெரிந்தவர் எனவும் கூறிய புகழேந்தி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால் தற்போது அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை என்றும் அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி உடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓபிஎஸ் ஆல் மட்டுமே எனவும் ரோஷம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் கையெழுத்திட்ட பதவியை ராஜினாமா செய்யட்டும் எனவும் கூறினார்.