வருகிற 29- தேதி கம்யூனிஸ்டு கட்சியின் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்- முத்தரசன் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு-வின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லகண்ணு- வை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உடன் இருந்தனர்.
தொடர்ந்து பேசிய மூத்த தலைவர் நல்லக்கண்ணு என்னை நேரில் சந்தித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. சுதந்திரத்தை பாதுகாக்க சமத்துவம் சகோதரத்துவம் இருக்க வேண்டும். இவைகள் இல்லை என்றால் சுதந்திரத்தை பாதுகாக்க இயலாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார் அதன் அடிப்படையில் சமத்துவ மற்றும் சகோதரத்துவத்தை பேணிக்காத்து சுதந்திரத்தை பாதுகாப்பது நமது கடமை.
மத்திய அரசு மதச்சார்பையும் மதத்தையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை சீரழித்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியில் மதசார்பறற ஆட்சி அமைக்க போராட வேண்டும் என்றார்.
முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 1925ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட இதே நாளில் நம் எதிரியான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தொடங்கப்பட்டது. மார்க்சியம் நமது தத்துவம், மனு தர்மம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் தத்துவம்.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் கொள்கை என்ன? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தங்களுடைய மனு தர்மம் தத்துவத்தை வெளியில் சொல்லமாட்டார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 29- ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி படி நடைபெறும். மழை புயல் என எந்த சூழல் இருந்தாலும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பேசினார்.
மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்த நாளுக்காக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் வந்திருந்தார். தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இன்று தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 ஆவது தொடக்க நாள் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். உடன் கட்சியின் மூத்த தலைவர் கே. டி .கே தங்கமணியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.