அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் ஒரே இயக்கம் திமுகதான் அமைச்சர் அதிரடி
அனைத்து சமுதாய மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் ஒரே இயக்கம் திமுக என்று சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் நூற்றாண்டு விழா பொது கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசினார் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றாத நிலையில், ஒன்றை ஆண்டுகளில் பெரும்பான்மை வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு திமுக அரசு என்றும் பேசினார்
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, 1986 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் உடன் பணியாற்றி வருவதாகவும், பன்முக திறமை கொண்ட பேராசிரியர் அவர்கள் தான், ஸ்டாலின் அவர்களை திமுக செயல் தலைவராகவும், தலைவராகவும் முன் மொழிந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என பேசியவர்கள் , ஜெயலலிதா இறந்த பின்னர் ஒரு இரங்கல் கூட்டம் கூட போடாதவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பேராசிரியர் அவர்களுக்காக நூறு பொது கூட்டங்களை நடத்தி அவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தி உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
கழகத்தை கட்டி காப்பாற்றி, அனைவரிடமும் அன்பை செலுத்த கூடிய பேராசிரியர், திமுகவில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று கற்று கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், பேராசிரியர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று பேசினார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் அதிமுக கோட்டை என்று பேசி வருகிறார். ஆனால் இனி சேலம் , முதல்வர் ஸ்டாலின் கோட்டையாக மாறி உள்ளது என்றும், பல வழக்குகள் கொண்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களை கைது செய்யாமல் உள்ளார். இதே போன்று தொடர்ந்து அவதூறாக பேசி வந்தால் கைது செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை விட திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார். சேலத்தில் அடுத்த சில நாட்களில் முதலமைச்சர் வந்து பல திட்டங்களை துவக்கி வைத்திட உள்ளார் என்று கூறி அதனை பட்டியலிட்டார். வாரிசு அரசியல் பேசும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் அதனை செயல்படுத்திட முடியாததால் திமுகவை பற்றி பேசுகிறார்.
அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் இயக்கம் திமுக . ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்கம் திமுக. ஆதலால் தான் தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரிகின்றனர் என்று கூறிய அவர், சேலம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் செய்து வரும் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசியஅவர், தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் என்றும் , நிதிசுமையை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினரை பற்றி பேச தகுதி இல்லை என்றும், 8 ஆண்டு கால ஆட்சியில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த 537 அறிவிப்புகளில், வெறும் 143 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றினார்கள் என்றும் , ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றை ஆண்டு காலங்களில் 230 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றி, மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தி வருகின்றார் முதல்வர் ஸ்டாலின் என பெருமையோடு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் சபதம் ஏற்க வேண்டும், பாராளுமன்ற த்திலும், சட்டமன்ற தேர்தலிழும் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பி.ஆர்.சுந்தரம், தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் மத்திய மாவட்ட திமுக அவை தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், தேர்தல் பணி குழு செயலாளர் தாமரைகண்ணன், சேலம் மாநகர செயலாளர் ரகுபதி என பலரும் கலந்து கொண்டனர்.