மின் கட்டண உயர்வை கண்டித்து ஓபிஎஸ் ஏரியாவில் ஈபிஎஸ் அணி மட்டும் ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் அதிமுக எடப்பாடி அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் தமிழகத்தில் கனமழை இல்லாத நகராட்சி பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி – அல்லிநகரம், போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய 6நகராட்சிகளில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைநகரான தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த ஒன்றிய நகரம், பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.