கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியை குறிவைக்கும் அதிமுக செய்தி தொடர்பாளர் 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த வேண்டும். 

எடப்பாடி பழனிச்சாமி 20 ஆண்டுகளாக தன் கையில் வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவியை சேலம் இளங்கோவனுக்கு வழங்க என்ன காரணம். அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி‌..

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து, 51வது ஆண்டு தொடங்குகிறது. இந்நிலையில் உட்கட்சி பிரச்சனையால் 3 அணிகளாக பிரிந்து இந்த ஆண்டு விழாவை கொண்டாடுகின்றனர். பழனிசாமி தரப்பினர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்  என தனித்தனியாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் குன்னூரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கலந்து கொண்டார்‌‌. அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோடநாடு கொலை வழக்கு சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் இளங்கோவனை அடையாளம் காட்டியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சின் பகுதியில்  வைத்து பேரம் பேசியதாக சம்பந்தப்பட்ட ஐந்து பேர் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஆண்டுகளாக தன் கையில் வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவியை சேலம் இளங்கோவனுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். 

கேடநாடு கொலை வழக்கு விசாரணையில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து இத்தனை காலம் ஆகியும்  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.  என்னை விசாரணை செய்தது போல் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சேலம் இளங்கோவன் ஆகிய இருவரிடமும்  விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *