கோவையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலிருந்து ஜாமினில் வெளிவந்த பாஜகவினர் அடாவடி
கோவை மத்திய சிறை வாசலில் ஜமாப் அடிக்க கூடாது என போலீசார் எச்சரித்த நிலையில் வழக்கு போட்டால் பார்த்துக் கொள்கிறேன் என பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பாஜகாவினர் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டதோடு போஸ்டர்களை எரித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரகளையில் ஈடுபட்ட 11 பாஜக உறுப்பினர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டர்களை ஜாமினில் விடுவிக்க கோரி போடப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 11 பேருக்கும் ஜாமின் பெறப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள 11 பேரையும் வரவேற்க பாஜகவினர் மத்திய சிறை முன் கூடி ஜபாப் அடித்து ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸ் ஆய்வாளர் பாஜவினர் ஜபாப் அடிக்க கூடாது அதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி போலீஸ் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் பார்த்துக் கொள்கிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.