கோவில் நிலத்தை ஆட்டயபோட்ட அதிமுக நபர், மக்கள் திரண்டு விவசாயம் செய்ததால் பரபரப்பு
திருவாரூர் அருகே கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் நிர்வாகி மோசடியாக பட்டா மாறுதல் செய்த நிலத்தை பொதுமக்கள் திரண்டு விவசாயம் செய்ததால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அருகே தோட்டக்குடி கிராமத்தில் பொதுவாக உள்ள 2 ஏக்கர் விவசாய நிலம் மாரியம்மன் கோவில் பராமரிப்பு மேற்கொள்வதற்காக உள்ளது. அதே கிராமத்தில் வசித்து வரும் கனகசுப்பிரமணியன் அதிமுக முன்னாள் கிளை செயலாளர்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குத்தகை எடுத்து நான்காண்டுகளாக சாகுபடி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது கோவிலுக்கு தர வேண்டிய நெல் மூட்டைகள் தர மறுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்காக கிராமத்தினர் பணம் கேட்டபோது அந்த இடத்தை தான் தனது தந்தை பெயரில் பட்டா மாறுதல் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குடவாசல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது இந்த சம்பவம் உண்மை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் மனு அளித்து இதுவரை எந்த இடம் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .
இந்த நிலையில் நேற்று கனகசுப்பிரமணியன் அந்த நிலத்தை உழுது விதை தெளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று அந்த நிலத்தை மீண்டும் கிராமத்திற்கு சொந்தமானது எனக் கூறி நிலத்தை கையகப்படுத்தி மீண்டும் டிராக்டர் கொண்டு உழுது விதை தெளித்தனர் .
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுமக்களால் மீட்கப்படும் நிலத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி என கூறப்படுகிறது