8 அடி பாய்ந்த ஓபிஎஸ்; எகிறி அடித்த எடப்பாடி – அதிமுகவில் பரபரப்பு!
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி, ஓ பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. இதனிடையே கட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வரும் ஓ.பி.எஸ்., கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அப்படி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கும் நபர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியதாக கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே இன்று காலை அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்”
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. என கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.