இது திராவிட மாடலின் அங்கம்தானோ?! – கொந்தளித்த டி.டி.வி. தினகரன்!
அரசு விழா ஒன்றில் பேசிய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பெண்களை பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது என திமுக அமைச்சர் பொன்முடிக்கு டிடிவி தினகரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.
பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?
மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.