‘எட்டுவழி சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம்’- அதிரடி காட்டிய வேல்முருகன்.
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்த ஆளுநர் தடையாக இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
எட்டு வழி சாலை திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு விளக்கம் அளிக்க தடுமாறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று இரவு சேலம் மெய்யனூர் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் நாம் இருந்த போதிலும் நம் மண்ணிற்கான உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்படமாட்டோம்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்காக மட்டும் தொடங்கிய மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் பல உயிர்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திய வேல்முருகன் , ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் கூறியது போல மதுபானக் கடைகளை படிப்படியாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தங்களோடு திமுகவும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் கூறினார்.
எட்டுவழி சாலை விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியிலிருந்து கொண்டு குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்; அவ்வப்போது மக்கள் பிரச்னைகளை நினைவுப்படுத்தும் வேலையை கூட்டணியிலிருந்து செய்வேன்.
ஆட்சியாளர்களிடமிருந்து என்னை பிரிக்க சங்பரிவார் சூழ்ச்சி செய்கின்றனர் என்று கூறிய வேல்முருகன் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்த ஆளுநரே காரணம் என்றும் குற்றம் சாட்டி பேசினார்.