மோடியிடம் கைக்கட்டி நின்ற நிதிஷ் குமார் – புகைப்படத்தை வெளியிட்ட பிரசாந்த் கிஷோர் 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவுக்கு மறைமுகமாக வேலை செய்து வருகிறார் என்று அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் கூப்பிய கைகளுடனும், முகத்தில் புன்னகையுடனும் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பை பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், முந்தைய கூட்டணியின் போது நிதிஷ் குமார் எப்படி பாஜகவிடம் பவ்வியமாக இருந்துள்ளார் என்று கூறி கேலி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ட்வீட் செய்த சில நிமிடங்களிலே பிரசாந்த் கிஷோர் அதனை நீக்கியுள்ளார்.

கடந்த மாதம், ஜேடி(யு) தலைவர் நிதிஷ் குமார் பாஜவுடனான உறவை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடி-காங்கிரஸுடன் கூட்டணி வைத்து புதிய அரசை அமைத்தார். அப்போதிலிருந்தே , 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜேடி(யு) கட்சியிலிருந்து நிதிஷ் குமார் நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், “ கூட்டணி கட்சிகளை மாற்றிய நிதிஷ் குமாரின் இந்த முடிவு, தேசிய அளவில் அல்ல, பிராந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *