பெண்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்த கட்சி; திமுகவை சரமாரியாக விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
தமிழகத்தில் பெண்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட 5000த்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக மின்கட்டண உயர்வு,சொத்துவரி , தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்க்கேடு மற்றும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் ஒரு பாத்ரூம் கட்ட கூட திட்டம் வகுக்கவில்லை.
கடந்த ஆட்சியில் எடப்பாடியார் தீட்டிய திட்டத்தை மட்டுமே திமுகவினர் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் மின்சார கட்டணம்,சொத்துவரி உயர்த்துவதாக அறிவித்த போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து வீடு முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டனம் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தி உள்ளார். இந்தியாவிலே 505வாக்குறுதிகளை மாநில கட்சிகள் இதுவரை அறிவித்து இருக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அறிவித்து இதுவரை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.பெண்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து 3சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்று ஆட்சியை திமுக பிடித்தனர்.
அஇஅதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தால் ஓபிஸை போலிசார் பாதுகாப்போடு அழைத்து சென்று அதிமுகவினருக்கு எதிராக வன்முறை அவிழ்த்து விட்ட திமுக அரசு.
மேலும் தமிழகத்தில் அடுத்த ஆட்சி எடப்பாடியார் தலைமையில் நடைப்பெற்று திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.