பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்..!!
பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானம் மூலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதலமைச்சர் , தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், ஒரு அரசியல் தீர்மானம் மற்றும் பொருளாதார தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என கட்சியின் தேசிய துணைத் தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் , கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பிறகு ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள ஒன்றிய அரசின் முயற்சிகள் போன்றவை குறித்து பொருளாதாரத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணி மணிக்கு முடிவடையவுள்ளது . அதைத் தொடர்ந்து நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.