குடியரசு துணை தலைவர் யார் என்பதில் பாஜக தீவிர ஆலோசனை..!!
குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவை வெற்றி பெறச் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக, மறுபுறம் குடியரசு துணை தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் காங்கிரஸ் அடையாளமாக நீண்ட நாட்களாக விளங்கிய அமரீந்தர் சிங், அக்கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனக் கசப்பால், காங்கிரசிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பித்தக்கது.