விடிய விடிய “அதிகாலை 4 மணி வரை” நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் “EPS”.. குஷியில் “OPS”!
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விடிய விடிய நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதனை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவில் விசாரித்தது. அப்போது, பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இரட்டை தலைமை என்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.23 தீர்மானங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு எந்த தீர்மானத்தையும் சேர்க்க கூடாது என வலியுறுத்திய ஓபிஎஸ் தரப்பு, கூட்டத்தில் புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், அதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் தரப்பு, தனது கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் எதையும் விவாதிக்க கூடாது என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கூட்டத்தில் என்ன நடைபெற போகிறது என்பதை வெளிப்படையாக உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது அவசியம் என கூறினார்.
மேலும், எழுதப்படாத தீர்மானங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என இபிஎஸ் தரப்பு பதிலளித்த நிலையில், பொதுக்குழுவில் புதிதாக தீர்மானம் நிறைவேற்ற கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கட்சியை ஒடுக்குவதைப் போல் உள்ளதாக இபிஎஸ் அதிருப்தி தெரிவித்தது. பொதுக்குழுவில் என்ன நடைபெறபோகிறது என்பதை ஓபிஎஸ்-க்கு முன்கூட்டியே ஏன் தெரிவிக்க கூடாது என நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவில் உறுப்பினர்கள்தான் முடிவெடுப்பர் என்றும், யூகத்தின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வரக்கூடாது எனவும் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என தெரிவித்தனர்.
ஆனால், 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம் எனவும், புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதனை ஏற்க மறுத்த இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவில் புதிய முடிவுகளை எடுக்கலாம் என்றும், ஆனால் அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.