அடுத்த பொதுக்குழு எப்போது?… வெளியானது அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வந்தது. மேடையில் பேசிய பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சிவிசண்முகம் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாகவும் பேசினர்.
தீர்மானங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழித்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களையும் இந்த அவை நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தொண்டர்களும் ஆராவாரம் செய்தனர்.
இதற்கான காரணத்தை விளக்கிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் தெரிவித்தார். .
எனவே அடுத்த எப்போது செயற்குழு- பொதுக்குழு கூடும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும், அதில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமி குறிப்பிட்டார்.
இதனையடுத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9.30 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.