நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு செயல்படுவார் – பிரதமர் நரேந்திர மோடி
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வந்தனர். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருக்கிறார்.
முதல் முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் சமூகத்துக்காகவும், ஏழை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராகவும் திரௌபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.