ராகுல் காந்தியிடம் விசாரணை: போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!
ராகுல்காந்தியை அமலாக்கத் துறையினர் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2-வது நாளாக போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி சோனியா காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது என்பது காங்கிரஸ் கட்சியினரின் புகார் ஆகும். நேற்று டெல்லி அமலாக்கத்துறை இருக்கும் சாலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைப்பெற்றது. ராகுல்காந்தி 2-வது நாளாக ஆஜர் ஆனதை தொடர்ந்து இன்றும் போராட்டம் நடைப்பெற்றது.
ஒன்றிய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அக்பர் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கிலாட், சதீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர், பிரியங்கா காந்தி போன்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்போது பேசிய சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாஹேல் பாஜக கட்சியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்மா சர்மா, நாராயணன் ஆகியோர் மீதான அமலாக்கத்துறை வழக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை ஏவும் மோடி அரசுக்கு எதிராக தங்கள் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இன்று டெல்லி மாநிலம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மேலும், நேற்று நடைபெற்ற போராட்டத்தின் தள்ளுமுள்ளுவில் கட்சியின் மூத்த தலைவர் பா. சிதம்பரம் போன்றவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.