அந்த 6 பேருக்கு நன்றி ..இணையத்தை கலக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் நன்றி பிரசுரம்

நடைப்பெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களித்த அந்த 6 பேருக்கு நன்றி என பிரசுரம் வழங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கொரோனா பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.மேலும் 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது .அனைத்து கட்ட தேர்தல்களிலும் சராசரியாக 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன .இதன் முடிவுகள் அக்-12 ஆம் தேதி எண்ணப்பட்டு வெளியாகின . நடைப்பெற்ற 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் , 138 இடங்களில் திமுக கூட்டணியும் 2 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றன . இதைப்போல் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களை திமுக கைப்பற்றியது .
இந்நிலையில் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ள பென்னலூர் ஊராட்சியின் 9 -வது வார்டு பகுதியில் போட்டியிட்ட சுயட்சை வேட்பாளர் முத்து என்பவர் தேர்தலில் மொத்தம் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியினை தழுவினார் .இதனிடேயே , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் , இவரும் துண்டு பிரசுரம் மூலம் நன்றியினை தெரிவித்து உள்ளார் . அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை : வாக்குகளில் என்னை தோற்கடித்து வாழ்க்கையில் ஜெயிக்க கற்று கொடுத்து உள்ளீர்கள் . உங்கள் அனைவரையும் புரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி எனவும் , ஆறுதலுக்காக 6 ஓட்டு போட்ட அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி ..நன்றி..நன்றி எனவும் தெரிவித்து உள்ளார் . மேலும் , உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம் , எப்போதும் போல் எனது பொது சேவை தொடரும் என குறிப்பிட்டு உள்ளார் . தற்போது இந்த துண்டு பிரசுரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .