தமிழக பாஜக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவராக இன்று அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தவருமான அண்ணாமலை.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. தேர்தலில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த நான்கு பேர் பேரவைக்கு தேர்வாகினர். அதே சமயம், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளவே, தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை.
இந்நிலையில், இன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்கிறார் அண்ணாமலை. இளைஞர் ஒருவர் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் தங்களது கட்சி தமிழகத்தில் வளர்ச்சியை காணும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாஜகவினர்.