ஆ.இராசாவின் துணைவியார் திருமதி பரமேஸ்வரி மறைவிற்கு கி.வீரமணி இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் துணைவியார் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சீரிய பகுத்தறிவாளருமான அருமைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களது துணைவியார் திருமதி பரமேஸ்வரி அவர்கள் இன்று மாலை சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் துன்பமும் அடைகிறோம்.


அருமைச் சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு எத்தனை சோதனைகளும் வேதனைகளும் அழிவழக்குகளும் வந்து தொல்லைகளை அனுபவிக்கும் போதெல்லாம் துணிவுடன் அவருக்கு துணைவியாய், ஆறுதலாய், தேறுதலாய் இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவியார் மறைந்த திருமதி பரமேஸ்வரி அவர்கள்.


பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதைந்துள்ள அஸ்திவாரம் போன்றவர்கள் அவர்களது வாழ்க்கைத் துணைவியர்.
இந்தக் காலகட்டத்தில் அவரது இழப்பு, தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவது போல இயற்கையின் கோணல் புத்தியின் விளைவேயாகும்.
அவருக்கு நாம் எளிதில் ஆறுதல் கூற இயலாது, என்றாலும் பகுத்தறிவாளராகிய அவர் தனது கொள்கை, இயக்கம், பொதுப் பணி மீது மேலும் தீவிரத்தோடு இயங்கி இந்த துயரத்தை மறப்பதற்கு முயற்சிப்பாராக!
அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *