ஆறடி இடம் கொடுக்காதவருக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா? ஸ்டாலின் ஆவேசம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவிற்கு எதிராக அனல் பறக்கும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி இன்று மேற்கு தாம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, “கலைஞர் கருணாநிதியின் மரணத்தின் போது, அதிமுகவினர் செய்ததை யாரும் மறக்க முடியாது. கலைஞர் மரணமடைகையில் அவரின் கடைசி ஆசையாக இருந்தது ஒன்று தான். அறிஞர் அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதைக் கூட இந்த அதிமுக அரசு நிறைவேற்ற விடவில்லை.
நான் முதல்வரை சந்திக்க செல்கையில் எல்லோரும் என்னை தடுத்தார்கள். அதன்பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதி பெற்றோம். உலகெங்கிலும் உள்ள தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கலைஞர் செயல்படுத்தியுள்ளார்.
அப்படி கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்காதவருக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா? சிந்தித்து வாக்களியுங்கள்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.