கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு; மு.க.ஸ்டாலின் முதல்வராவது நிச்சயம் – ஈஸ்வரன்!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஒப்பந்தம் இரு கட்சி தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே. க போட்டியிடும். திமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதும், நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.