பிப் 25 முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு – கே.எஸ். அழகரி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் போட்டியிட விருப்புவர்களுக்கான விருப்ப மனுவை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, மார்ச் 5ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரமும், தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறும் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடைத் தொகையை TAMILNADU Congress COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.