INDIA கூட்டணியின் பிரதமரை ஸ்டாலின்தான் முடிவு செய்வார்.. திருச்சி சிவா உறுதி
INDIA கூட்டணியின் தலைவரையும் பிரதமர் வேட்பாளரையும் தேர்ந்தெடுக்கக்கூடிய இடத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளார் – 2024ஆம் ஆண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான முக்கியமான தேர்தல் என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழு உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் நடைபெற்றது. மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை கலைஞர் சத்தான உணவு திட்டமாக மதிய உணவோடு முட்டை மற்றும் பழத்தை வழங்கினார். இன்றைய முதல்வர் அதனை மேலும் மெருகேற்றி காலை உணவோடு வழங்கி வருவதாகவும் அதனை விமர்சிப்பவர்கள் வயிற்றெரிச்சல் காரணமாக விமர்சிப்பதாகவும் அதனை நாம் பொருட்படுத்தாமல் தம் பணிகளை மேற்கொள்வோம் எனவும்,
INDIA கூட்டணியில் திமுக மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும் , கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவை மதித்து பின்பற்றி வருவதாகவும், INDIA கூட்டணியின் தலைவர் மற்றும் பிரதமர் வேட்பாளரை அறிவாலயத்தில் இருக்கும் நமது தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முடிவு செய்யக்கூடிய இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இனி ஒரு முறை பாஜக பலம்பெருமானால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து எனவும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகத்தையும் , இந்தியாவின் எதிர்காலத்தையும் பாதுகாக்க கூடிய தேர்தல் எனவும் எனவே பொதுமக்கள் கவனமாக அதனை கையாள வேண்டும் எனவும் பேசினார்