சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம்; வழக்கறிஞர்கள் சங்கங்கள் கண்டன ஊர்வலம்

பொன்னேரியில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்யும் ஒன்றிய அரசின் மசோதாவிற்கு பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கண்டனம். ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை கைவிடும் வரை வழக்கறிஞர்களின் எதிர்ப்பு நீடிக்கும் என்று வழக்கறிஞர் சங்கங்கள் உறுதி

ஒன்றிய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களில் இந்திய சட்டங்களின் பெயர்களை, அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டங்களின் பெயரை ஹிந்தியில் மாற்றி மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அதாவது இந்தியன் பீனல் கோட் 1860 ம் ஆண்டு IPC என்பதை பாரதிய நியாய சன்ஹிடா 2023 (Bharathiya Nyaya Sanhita 2023) என்றும்,

கிரிமினல் புரொசிஜர் கோட் 1973 என்பதை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிடா 2023 (Bharatiya Nagarik suraksha Sanhita 2023) எனவும், இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872 என்பதை பாரதிய சாக்ஷயா அதிநயம் 2023 (Bharatiya Sakshaya Adhinayam 2023) எனவும் இந்தியில் பெயர் மாற்றம் செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக சட்டமாமேதை அம்பேத்கர் சிலையில் இருந்து சார்பு நீதிமன்றம் வரை ஊர்வலமாக சென்றனர். 

தொடர்ந்து சார்பு நீதிமன்ற வாயிலில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு துறைகளில் ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசு நீதித்துறையிலும் தலையிட்டு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். 

பாராளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் 3சட்டங்களின் பெயரை மாற்றம் செய்தும், திருத்தம் செய்தும் மசோதா தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த சட்ட திருத்தத்தில் உள்ள ஷரத்துக்கள் அனைத்தும் வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுங்கோல் சட்டம் என சாடினர். 

100ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சட்டங்களை 2024ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நேரத்தில் சர்வாதிகார போக்குடன் ஒன்றிய அரசு மாற்றம் செய்ய முயற்சிப்பதாக சாடினர். பெயர் மாற்றத்தையும், சட்ட திருத்தத்தையும் வழக்கறிஞர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது என்றும், ஒன்றிய அரசு சட்டங்களின் பெயர்களை மாற்றும் மசோதாவை திரும்ப பெறும் வரை வழக்கறிஞர்கள் போராட்டங்கள் ஓயாது எனவும் அப்போது தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *