மணிப்பூர் கலவரத்தை தடுக்காத உள்துறை அமைச்சர் பதவி விலகக்கோரி .. பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தை தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இன கலவரம் வெடித்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர். கலவரத்தின் உச்சமாக பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக நாடெங்கும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக  மணிப்பூர் கலவரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன பேரணி நடத்தினர்.

சமயநல்லூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி அருகே துவங்கிய பேரணி சமயநல்லூரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சமயநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பேரணி முடிவுற்றது. பின்னர் அங்கு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *