மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.. விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்திட அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு , கள் இறக்கி சந்தைப்படுத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் மேகதாது அணை கட்டுவதை ஒன்றிய அரசும் , மாநில அரசும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் நாமக்கல் ராசாமணி கூறும்போது, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும் , தமிழக விவசாயிகள் கர்நாடகாவிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் . கர்நாடகாவில் பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருவதால் மத்திய பாஜக அரசு மேகதாது அணை விவகாரத்தில் சரியான முடிவு எடுக்காமல் தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும், தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் நாடகம் ஆடுவதாகவும் குற்றசாட்டிய அவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.