மணிப்பூர் மக்களுக்காக கொட்டும் மழையிலும் போராடிய பழங்குடியின பெண்கள்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து உதகையில் திமுக மகளீர் அணி சர்பாக நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குரும்பர், இருளர், தோடர், கோத்தர் உள்ளிட்ட 6 வகையான பழங்குடியின பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் கலவரத்தில் கடந்த மே மாதம் கலவரகாரர்கள் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணபடுத்தி சாலையில் அழைத்து சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றது. அது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானதால் கடும் சர்ச்சையை ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுக மகளீர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி நீலகிரி மாவட்ட திமுக மகளீர் அணி சார்பாக இன்று உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏடிசி பகுதியில் மாநில மகளீர் ஆணைய தலைவரும் திமுக மகளீர் அணி துணை தலைவருமான குமரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் குரும்பர், இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் ஒன்றிய பிஜெபி அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.