புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒரு மாதமான நிலையில், குலாம் நபி ஆசாத் தற்போது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அவர் தொடங்கிய கட்சிக்கு டெமாக்ரடிக் ஆசாத் பார்டி அதாவது ஜனநாயக ஆசாத் கட்சி என்று பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது, “கட்சிக்கு பெயர் வைப்பது மிகவும் கடினமாக இருந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட பெயர்களை நாங்களா பரிசீலித்தோம். மேலும் எங்கள் கட்சியில் பிரிவினைவாதம் இருக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளின் கலவையில் பெயர் வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம். அதனால் தான் இரு மொழிகளின் கலவையான இந்துஸ்தானி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனநாயகம், அமைதி, சுதந்திரம் ஆகியவைதான் கட்சியின் அடிப்படை கொள்கை என்பதால் இதைக் குறிக்கும் விதத்தில் பெயர் வைத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
மேலும் அவரது கட்சிக் கொடியில் மஞ்சள், வெள்ளை, நீளம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றுள்ளன.மஞ்சள் நிறம் வேற்றுமையில் ஒற்றுமையை குறிப்பதாகவும், வெள்ளை நிறம் அமைதியை குறிப்பதாகவும், நீல நிறம் சுதந்திர சிந்தனையையும், கனவுகளையும் குறிப்பதாகவும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராகவும் இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் மோசமான நிலைக்கு ராகுல் காந்திதான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.