புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த மத்திய அமைச்சர்..!! நடந்தது என்ன..?
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், நெகிழி இல்லா கடற்கரையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் காலையில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதனை அடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது அவரை வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தும் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர் கூறும்போது பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் குறிப்பாக கடலில் தேங்கும் நெகிழி பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. இதற்காக செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் எல்லாம் முன் முயற்சியில் இறங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தமிழகத்தில் தூய்மையான கடற்கரையை பேணி காப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து இருக்கிறார்கள் என்று கூறினார்.