சோனாலி போகாட் மரணம்: கோவா கிளப் உரிமையாளர் கைது..!!
சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகட் கடந்த 22ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், கோவா கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது சோனாலியை அவர்கள் கட்டாயப்படுத்தி குளிர்பானம் ஒன்றை குடிக்க வைத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுத்ததை சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்திர் சிங் ஒப்புக் கொண்டனர்.
கிளப்பின் கழிவறையில் இருந்து போதைப்பொருட்களும் போலீசார் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கிளப்பில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதால் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.