பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும்- ரங்கசாமி
தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது சில செய்தித்தாள்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் ஆர்என்ஐ அனுமதியில்லாத செய்தித்தாள்களை தடை செய்ய வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி பேசுகையில் பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுவையில் தடை செய்யப்படும். தவறான செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்கள் மீது இந்த தடை நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 22 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கடந்த 10- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சட்டசபை வளாகத்திற்கு வந்து உரையாற்றினார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தான் சபை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதுவையின் பட்ஜெட் ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.