டெல்லியில் பயங்கரம்: இளைஞர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
டெல்லியில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இளைஞர் தனது நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வரும் மயங்கிடம் அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இங்கே நின்றால் ஆபத்து என்பதை உணர்ந்த மயங்க் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால், அப்போதும் விடாப்பிடியாய் துரத்திய அந்த கும்பல், மயங்கை சுற்றி வளைத்தது. மார்க்கெட் பகுதி என்பதால் அங்கு மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் பற்றி கவலைப்படாத அந்த கும்பல் மயங்கை சரமாரியாக கத்தியால் குத்தியது.
கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மயங்கை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மீட்ட அவரது நண்பர் அருகில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் மயங்க் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடுரோட்டில் இளைஞரை குத்திக் கொன்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.