இடைநீக்கத்தை ரத்து செய்த சபாநாயகர்..!! கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறுத்தல்..!!
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இருந்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளுடன் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் லோக்சபா உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்த நான்கு எம் பி-க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 27 எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி-க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.