உச்சி மாநாட்டில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுப்பது ஏன் – அரவிந்த் கெஜ்ரிவால்
சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ள நிலையில் இதுவரையில் அனுமதி கிடைக்காததால், நான் ஒன்றும் குற்றவாளியல்ல எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால், உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வராதது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஒன்றும் குற்றவாளியல்ல. மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான். இருப்பினும், சிங்கப்பூரில் நடக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து என்னை தடுப்பதற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை.
அது மட்டுமல்லாமல், டெல்லி, சுகாதாரம் மற்றும் பள்ளிகளில் சேவைகளின் வளர்ச்சி குறித்து எடுத்துச் சொல்ல சிங்கப்பூர் அரசு என்னை அழைத்துள்ளது. இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.