காமராஜர் பிறந்தநாள்: நினைவு கூர்ந்த முக்கிய தலைவர்கள்..!!

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரை முக்கிய தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரை போற்றும் விதமாக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி திரு.காமராஜர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கமுடியாத பங்களிப்பு செய்தவர்.
கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்.
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம். கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள். தரமான கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திட பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் உறுதி கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.