கேரளாவில் கனமழை..!! சில பகுதிக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த கேரள அரசு..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர் மழை காரணமாக கேரளாவில் மலப்புரம், பாலக்காடு, காசர்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்னும் சில தினங்களில் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு மற்றும் கல்லார்குட்டி அணைகளின் சுற்றுவட்டாரத்தில் ரெட் அலர்ட் மற்றும் திருச்சூர் மாவட்டம் பெரிங்கள்குது அணை அருகே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஒவ்வொரு குழு தயார் செய்யப்பட்டுள்ளது என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.