வரலாற்று சிறப்புமிக்க முடிவு… பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சரின் வாழ்த்து

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரதமருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ’ அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளின் 15% இடங்கள், மத்திய அரசின் தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட இடங்களில், கடந்த பல ஆண்டுகளாக
பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு பெறப்பட முடியாமல், மாணவர்களுக்கு சமூகநீதி கிடைக்காமல் இருந்தது. இதுசம்பந்தமான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்தன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்பான கொள்கை முடிவாக, நம் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில், அனைத்திந்திய தொகுப்பிலும், பிற்படுத்தப்பட்டோருக்கும், பொருளாதார ரீதியிலான நலிவடைந்த பிரிவினருக்கும் முறையே 27% இடத்தையும், 10% அளிப்பது என்று அறிவித்துள்ள மத்திய அரசின் முடிவை மிக மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.
சமூக நீதிக்கான ஒரு பெரும் செயலை செய்திருக்கிற பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி அரசின் சார்பாகவும், மக்கள் சார்பாகவும்
நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனால் இந்த வருடம் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் கூடுதலாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 1,500 மாணவர்களும், மருத்துவப் பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 2,500 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவர்களும் பயனடைவார்கள்.
இது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சமூக நீதிக்கான மத்திய அரசின்
முடிவிற்கு, பிரதமருக்கு மாபெரும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.