ட்விட்டருக்கு அரசு இறுதி எச்சரிக்கை
சமூக ஊடகங்களுக்கான புதிய சட்டங்களை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.
மேலும், சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த புதிய விதிமுறைகளை ஏற்க 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்த விதிகளுக்குக் கட்டுப்படாத நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.
இதன்காரணமாக,புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து,கூகுள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள்,இந்தியாவில் தங்களுக்கான குறைதீர்க்கும் அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளன.
ஆனால், மத்திய அரசுடன் ஏற்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பின் ட்விட்டர் நிறுவனம் இந்த விதிகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. ஆனால், குறை தீர்க்கும் அதிகாரியை இன்னும் நியமிக்கவில்லை.
இதனால், “சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ” என மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.