ஜனநாயகத்தின் கழுத்தை பாஜக நெரிக்கிறது – ராகுல் காந்தி

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியது நிச்சயமாக தவறானது என காங்கிரஸ் எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசுவுடன் நடந்த கலந்துரையாடலில் ராகுல் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், “1975 முதல் 1977 வரை 21 மாதங்களாக நாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தியிருந்தார். அது நிச்சயமாக ஒரு தவறு என நான் கருதுகிறேன். ஆனால், அப்போதும் கூட காங்கிரஸ் நாட்டின் அமைப்புகளை சீர்குலைக்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானாலும் அப்படிச் செய்யும் தன்மை காங்கிரஸுக்கு இயல்பிலேயே இல்லை. எங்களின் கட்டமைப்பு அத்தகைய செயல்களை எப்போதும் அனுமதிக்காது.
இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைக்கும் பாஜகவின் தற்போதைய அவசர நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளிலும் தங்களது ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது. நீதிமன்றங்கள் தொடங்கி எல்லா இடங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளே நிறைந்துள்ளனர்.
ஆகையால், நாம் தேர்தலில் பாஜகவினரைத் தோற்கடித்தாலும் கூட, அவர்கள் நாட்டின் முக்கிய அமைப்புகளை நிரப்பிவைத்துள்ள சங் பரிவார் ஆட்களை விட்டு நீங்க முடியாது.
பாஜக அமைப்புகளின் சுதந்திரத்தை தொடர்ந்து அசைத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் கழுத்தை பாஜக நெறித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு என்னால் ஒரு சான்றையும் சொல்ல முடியும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது முதல்வராக இருந்த கமல்நாத் என்னிடம் பேசினார். அப்போது அவர், மாநிலத்தில் உள்ள உயரதிகாரிகள் யாரும் அரசு உத்தரவுகளை பின்பற்ற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்றார். அவர், அதைச் சொல்லி சில நாட்களில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.
இதைத் தான் நான் பாஜகவின் நெருக்கடி நிலை எனக் குறிப்பிடுகிறேன். ஜனநாயகத்தின் அடிப்படையில் தவறு நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.