என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை!

புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி இருந்தது. திடீரென இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில், பாஜக ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக என்.ஆர். காங்கிரஸ் அறிவித்திருந்தது.
ஆனால், புதுச்சேரியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பின், பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்வது குறித்து இன்று மாலை ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.