போதைப் பொருளுடன் சிக்கிய பாஜக இளைஞரணிச் செயலாளர்… அதிரடியாக கைது செய்த மேற்கு வங்க போலீசார்!

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் பாஜகவின் பமீலா கோஸ்வாமி 100 கிராம் கோகைன் போதைப் பொருளுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் தெற்கு கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில், காரில் போதைப்பொருளோடு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து கிட்டத்தட்ட 100 கிராம் அளவிலான கோக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு வங்க போலீஸார், பமீலா கோஸ்வாமி போதைப்பொருள் வாங்கப்போவதாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும், அதற்கேற்றார் போல் பெண் அதிகாரிகள் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு பமீலா கோஸ்வாமியை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். பமீலா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பமீலா கோஸ்வாமியோடு சேர்த்து அவரது நண்பர் பிரபீர் குமார் மற்றும் பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலர் ஆகியோரும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி செய்து தம்மை சிக்க வைத்துவிட்டதாகவும், மேலும் அவர் சதி செய்ததற்கான ஆடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் போதை பொருளுடன் பிடிபட்ட மேற்கு வங்க பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ள மேற்கு வங்க அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.