வயதானவர்கள் வாக்களிக்க இலவச கார் பயணம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், வாக்களிக்க நேரில் வர முடியாதவர்களுக்காக தபால் வாக்கு செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக முதலில் தபால் வாக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் வாக்குக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. வயதானவர்கள் அதே சமயம் தபால் வாக்குக்கு விண்ணப்பிக்காமல் நேரில் வாக்களிக்க விரும்புபவர்களுக்கு காரில் இலவச பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக, தேர்தல் ஆணையம் ஊபர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம், “
தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கடமையைச் செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக 80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையைத் தர ஊபர் நிறுவனம், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.
எனவே, வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 2021-ல் மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.
மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு பயணக் கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.
சவாரி செய்வோர் கைப்பேசியின் மூலம் “ஊபர்” செயலி (Uber App) வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்” என தெரிவித்துள்ளார்.