நேர்மையான அரசியல் செய்து புதிய தமிழகத்தை உருவாக்குவோம்..! அறிமுக கூட்டத்தில் அழைப்பு விடுத்த சகாயம்

”வாருங்கள், மக்களுக்கு எளிய அரசியலை வழங்குவோம்” என இளைஞர்களுக்கு ஓய்வுப்பெற்ற முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இந்திய ஆட்சிப்பணிகள் பிரிவில் பணியாற்றிய போது தனது அதிரடியான நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்தார். அதிகாரத்தில் இருந்தவர்களின் ஊழல்களை ஊடக வெளிச்சத்திற்கு தைரியமாக கொண்டு வந்தார். இதனை பொறுக்காத அரசு அவருக்கு நிறைய நெருக்கடிகளை கொடுத்தது. முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றியது. இதனால் பதவி காலங்கள் இருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் இவரது அரசியல் பிரவேச நிகழ்ச்சி சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சகாயம், ”துடிப்புமிக்க இளைஞர்கள் அனைவரும் வாருங்கள். ஒன்று சேர்ந்து நேர்மையான அரசியல் செய்வோம். புதிய தமிழகத்தை உருவாக்குவோம்” என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ”தனக்கு பதவி மீது ஆசையில்லை. எந்த நடிகரிடமும் பேசவில்லை. இளைஞர்களோடு பயணிக்க தான் ஆசைப்படுகிறேன். கடைசி வரைக்கும் நேர்மையாக, சாதியை உடைத்தெறியும் லட்சியம் உள்ளவராக இருப்பேன். வாருங்கள் மக்களுக்கு எளிய அரசியலை வழங்குவோம்” என கூறியுள்ளார்.