பள்ளிக்கல்வி ஆணையரின் புதிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்…பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்!
11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்டப் பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களை விட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்த பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயார் செய்து தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும், தலைவர் முனைவர்.இரத்தினசபாபதி மற்றும் துணைத் தலைவர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி ஆகியோரும் இந்தப் புதிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.
நோய்த் தொற்றுக் காலக் கட்டத்தில் படிக்க ஆர்வத்துடன் குறிப்பிட்டப் பிரிவில் சேர அரசுப் பள்ளியை நாடிவரும் மாணவரை வடிகட்டி, அப்பிரிவை மறுப்பது நியாயமற்றது. அரசுப் பள்ளிகளில் தேவை ஏற்படின் கூடுதல் வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தாமல், மாணவர் கோரும் பிரிவை மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை.
கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசிடம் பணம் இல்லையா? அல்லது போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ் நாட்டில் இல்லையா? பதினொன்றாம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது. சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் அதே பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும், அதற்கு அடுத்ததாக பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பிரிவை மறுக்காமல் வழங்க வேண்டும். மிக அதிக அளவில் விண்ணப்பம் வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அதற்குரிய அனுமதி அளித்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்துப் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை வைத்துள்ளது.