’ஆல் பாஸ்’ என்பதை விட மாணவர்களின் எதிர்காலம் தான் முக்கியம் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி வரகனேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய சூழலில் தேர்வுகள் என்பது கட்டாயம். இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. எல்லோரும் ஆல்பாஸ் என்று சொல்லிவிட்டு போய்விடலாம். எல்லா மாணவர்களும் பாராட்டுவார்கள். அது முக்கியமல்ல. ஆனால் இந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு அவர்கள் எந்த கல்லூரியில் சேர்வார்கள். எந்த கல்லூரி அவர்களை எடுத்துக்கொள்ளும். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பார்த்து பார்த்து ஆலோசனை செய்து முடிவெடுத்து வருகிறோம். முதல்வர் ஆலோசனையும் கேட்டு ஊரடங்கு முடிந்ததும் நல்ல முடிவை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.