வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை..!
நீலகிரி மாவட்டம் கோலக்கம்பை அருகே உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 2 வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளீர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள மேலூர் பகுதியில் தனியார் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வட மாநிலத்திலிருந்து தேயிலை தோட்ட தொழில் செய்வதற்காக வந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக இருந்த அப்பு சாமி என்பவர் 3-ஆம் வகுப்பு சிறுமி மற்றும் 5 வகுப்பு படித்த வடமாநில சிறுமிகளை மதிய உணவு இடைவெளியின் போது அடிக்கடி தனியாக அழைத்து தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அது குறித்து குன்னூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. அதனையடுத்து தலைமை ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யபட்டார். அது குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதாவது ஒவ்வொரு சிறுமி கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது. அதன் படி 2 சிறுமிகள் கொடுத்த புகரில் 6 பிரிவுகளாக கருதி தலா 7 ஆண்டுகள் வீதம் 42 ஆண்டுகள் தண்டனை விதிக்கபட்டது. ஆனால் அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் 7 ஆண்டுகள் மட்டுமே அவர் சிறை தண்டனை பெறுவார் என்பது குறிப்பிட தக்கதாகும்.