ஆணவ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தந்தை மனு

மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் தனது மகனை ஆணவ கொலை செய்துள்ளனர் எனவே  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தந்தை வழக்கு.வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் வழக்கில் வன்கொடுமை சட்டபிரிவு நீக்கியது ஏன் விரிவான விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லை அப்புவிளையைச் சேர்ந்த பி.கண்ணியப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திசையன்விளை பேருந்து நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 3 மகன்கள், ஒரு மகள். என் கடைசி மகன் முத்தையா (19), சங்கனாகுளத்தில் ஒரு கடையில் பணிபுரிந்தார். அவரும் அவருடன் பணிபுரிந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்தனர். இந்த விஷயம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. பெண்ணின் உறவினர்கள் என் மகனை மிரட்டினர். இந்நிலையில் 23.7.2023-ல் முத்தையா வீட்டை விட்டு வெளியே சென்றார். 

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் அங்குள்ள கால்வாயில் முத்தையா கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸார் முதலில் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வன்கொடுமை பிரிவை நீக்கிவிட்டு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

முத்தையாவை ஆணவக் கொலை செய்துள்ளனர். என் மகன் கொலை வழக்கை திசையன்விளை போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என  மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, இந்த வழக்கில் இதுவரை எத்தனை பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்? வன்கொடுமை சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன்? என்பதை அரசு தரப்பில் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *