மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய கணவர் கைது..!
மதுபோதையில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தற்கொலை என நாடகமாடிய கணவரை வேலம்பாளையம் போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவர் வெண்ணிலா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு 2 குழந்தைகள். சந்தோஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில், சந்தோஷ் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சந்தோஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததால், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதனால் தம்பதியரிடையே தகராறு எழுந்தது. கடந்த மே 30-ம் தேதி வெண்ணிலா வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்தில் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் சந்தோஷிடம் விசாரித்தனர்.
தம்பதியரிடையே எழுந்த தகராறில் மது போதையில் இருந்த சந்தோஷ், வெண்ணிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷை இன்று கைது செய்தனர்.